No Image Available

Meyiyal மெய்யியல்

 Author: ம.செந்தமிழன்  Category: Semmai Vanam  Publisher: செம்மை  Country: India  Language: Tamil  Tags: மெய்யியல் |
 Description:

Meyiyal மெய்யியல்

ஆசான் ம.செந்தமிழன் அவர்கள் எழுதிய மெய்யியல் எனும் நூலில் இருந்து….

எது இயக்கத்தில் மிகுதியாக இருக்கிறதோ அது புலனறிவிலிருந்து விலகுகிறது. இயக்கம் மிகுந்து செல்லும்போது புலனறிவுக்கு எட்டாது. இயக்கம் தணிந்தால் புலனுக்கு எட்டும். உச்ச நிலை இயக்கம் வேறு. மிகை இயக்கம் வேறு. ஆகாயம் முதலான பூதங்களுக்கு உள்ளது மிகை இயக்கம். உச்சநிலை இயக்கம் என்பது இதற்கு மேல் இயக்கமே இல்லை என்று பொருள்படும். பக். 33

‘உங்கள் தனித்தன்மை வெளிப்படாத வகையில் எதையேனும் கற்றுத் தருவது பாவம்’ என்று ஆழமாக உணர்ந்தவன் நான். சிலர் ஓரிரு நாட்களில் கற்றுக் கொள்ளலாம், சிலர் ஓரிரு ஆண்டுகள் கழித்து கற்றுக் கொள்ளலாம். அந்த கால வேறுபாடு எனக்கு சிக்கல் இல்லை. உங்களுக்கும் சிக்கல் இல்லை . ஆனால் அனைவருக்கும் ஒரே நேரத்தில், ஒரே சூழலில், ஒரே களத்தில், ஒரே பாடத்தை அப்படியே கற்றுக் கொடுத்து விட வேண்டும், என்று துடிப்பது இயல்புக்கு மாறானது. உண்மைக்கு எதிரானது அப்படி யாரும் கற்றுத் தர முடியாது.
பக். 45

பெருமை என்ற எண்ணம் வரும். அது வருவதே நம் கையால் கொலை செய்யப்படுவதற்குத்தான்’ என்று காத்திருக்க வேண்டும். அது ஒரு வேட்டை சிலர் நம்மைப் புகழ்கிறார்கள் என்றால், சில கொலைகளைச் செய்து, பொழுதைப் போக்கலாம். இப்படி வேட்டையாட வேண்டும். கிடைக்கும் பெருமைகளை எல்லாம் உடனடியாக வேட்டையாடி விடுபட வேண்டும். பெருமையை, தொடர்ந்து வேட்டையாடினால் தொடர்ந்து பெருமைப்படுத்துபவர்கள் குறைந்து விடுவார்கள். பெருமையையெல்லாம் உள்ளே வாரி அலமாரியில் வைத்துப் பூட்டிக் கொண்டு ‘எனக்கு பெருமை வேண்டாம்’ என்று சொன்னால், பெருமையையே போலித்தனமாக பேசுபவர்கள்தான் உங்களுடன் இருப்பார்கள்.
பக். 120

எப்பொழுதும் பிறருடைய நலனுக்காக வேண்டுங்கள். அவர்களுடைய இன்பத்திற்காக வேண்டுங்கள். உங்களுக்கு எதிராக இருப்பவர் என்றாலும், உங்களுக்கு அருகில் இருப்பவர் என்றாலும் அவருடைய இன்பத்திற்காக நீங்கள் வேண்ட வேண்டும். அதையன்றி உங்களுக்கு வேறு வழியில்லை. அதையன்றி உங்களுக்கு வேறு இன்பமும் இல்லை. இது எதிரிகளை அல்லது பாவிகளை மன்னிக்கும் பெருந்தன்மை இல்லை. இதில் எந்த பெருந்தன்மையும் இல்லை. இதுதான் உங்களுடைய இயல்பு. பக். 140

நீங்கள் தாய்மையோடு இருந்தால் உங்களுக்குத் தேவையான எல்லா சக்திகளும் வழங்கப்படும். ஓர் உயிர் துடிப்பதைக் கண்டு, உங்களால் பொறுக்க முடியவில்லை என்றால் அது தாய்மை. அதைக் காப்பாற்றுவதற்குத் தேவையான சக்தி உங்களுக்கு வழங்கப்படும். ஒருவர் பட்டினியால் வாடுவதை உங்களால் பொறுக்க முடியவில்லையா? அது தாய்மை. அவருக்கு உணவளிப்பதற்கான சக்தி உங்களுக்கு வழங்கப்படும். வீடற்றவர்களைப் பார்த்து கலங்குகிறீர்களா? அவர்களுக்கு வீடு அமைத்துத் தருவதற்கான சக்தி உங்களுக்கு வழங்கப்படும். ஒரு மனிதர் ஆயிரமாயிரம் சக்திகளோடு வாழ முடியும். அவர் தன்னுடைய தாய்மையை எவ்வளவு விரிக்கிறார் என்பதைப் பொருத்து அவருக்கு சக்தி வழங்கப்படும். இதுதான் சக்தி. பக். 240

நூலை பெற :
https://semmaivanam.org/product/meyiyal/

Visit Tamil desiyam for more details about Tamil language, siddha medicine, Tamil books, civilization, culture, politics, people and History.

 Back